மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.
பிக்கிலி ஊராட்சி மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொல்லை வழியாக மலையூருக்கு தார்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்ட வன அலுவலர் இராஜாங்கத்திடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம்பின்வருமாறு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக்குபட்ட மேட்டுக்கொட்டாய் கிராமம் முதல் வாரக்கொல்லை வழியாக மலையூர் வரை குண்டும், குழியுமாக மண்சாலை உள்ளது. சுமார் 5.5 கி.மீ. தூரம் மலைப்பாங்கான சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும், மருத்துவமனை செல்பவர்களும், விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்பவர்களும், தினசரி வாரச்சந்தைக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் கற்கள் நிறைந்த மண்சாலையில் மிகவும் சிரமப்படுகின்றனர்.தினம் தினம் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்கும் நிலை உள்ளது.

இந்த கற்கள் நிறைந்த மண்சாலையில் ஐம்பள்ளம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் 100 டன் எடைக்குமேல் உள்ள பாறைகள் சரிந்துவிழும் அபாயகரமான நிலை உள்ளது. மேற்கண்ட சாலை சரியில்லாததால் மலையூரிலிருந்து வாரக்கொல்லை வழியாக பிற ஊர்களுக்கு போக முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த சாலையை தார்சாலையாக மாற்றுவதன் மூலம் பிக்கிலி ஊராட்சி சக்கில்நத்தம் வழியாக பாலக்கோடு மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே இம்மக்களின் நலன்கருதி மேட்டுக்கொட்டாய் முதல் வாரக்கொல்லை வழியாக மலையூர் வரை விரைவாக தார்சாலை அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி விவசாய தொழிலாளர் சங்க பகுதிகுழு தலைவர் சின்னராசு விவசாயிகள் சங்க நிர்வாகி காமராஜ் ,மற்றும் சின்னசாமி ,பெருமாள் ஆகியோர் மனுகொடுத்தனர்.
