ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார்
தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3வது நாளாக இன்று வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட அஜ்ஜனஅள்ளி, கோடிஅள்ளி, சுஞ்சல்நத்தம், தின்னபெல்லூர், இராமகொண்டஅள்ளி, சோளப்பாடி, ஜாரிமாங்குறிச்சி, நாகமரை உள்ளிட்ட வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 226 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில், 3.10 ஏக்கர் நிலப்பரப்பில் நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-க்கும் மேலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், சுற்றுலா அலுவலர் து.உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

