ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.
தருமபுரி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக இன்று (26.06.2024) 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக இன்று வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கலப்பம்பாடி, மஞ்சிநாயக்கனஅள்ளி, கடமடை, புதுப்பட்டி, சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, பெரும்பாலை, பத்ரஅள்ளி, கெண்டேனஅள்ளி ஆகிய வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 228 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் .சுகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

