கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தடுக்க தவறியதி.மு.க. அரசை கண்டித்து அதிமுக நாளை உண்ணாவிரத போராட்டம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாரய மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதி.மு.க சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பதிலாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

