தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உயிருக்கு உலை வைக்கும் புகையிலை வேண்டாம், புகை பிடிக்காதே உன் வாழ்க்கையின் புன்னகையை இழக்காதே, போதைப் பொருட்களை நாடாதே சாவை தொடாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, வள்ளலார் திடல் வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்று முடிவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன், நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


