தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில், கலந்து கொண்ட விவசாயிகள் அவர்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். இதற்கு துறை அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விளக்கம் அளித்தனர். இதில், பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் தற்போது கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில், கரும்பு வெட்டு கூலி உயர்வால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். அவற்றை ஈடுகட்ட அரசு, 50 சதவீத வெட்டுக் கூலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி பகுதியில் விவசாய விளை நிலங்களில் மத்திய அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் கனிம வளங்கள் குறித்து, ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். நேற்று முன்தினம், நடந்த ஆய்வுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும், ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி சுத்தம் செய்யது., வரும் பருவ மழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினர்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.
விவசாயிகளின் கேள்விகள் மற்றும் குறைகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்லி ராஜ்குமார், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, வேளாண்மை இணை இயக்குனர்(பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மலர்விழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.


