பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் இன்று ஒகேனக்கலில் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் அ.குமார், அறிக்கை சமர்ப்பித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், எஸ் . கிரைசாமேரி, வி.ரவி, ஆர்.சின்னசாமி , ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர். மணி அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு கட்சியின் மாவட்டக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மாவட்டத்தில் சமீபத்தில் பெய்துள்ள பருவ மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானிய விலையில் விதை, உரம் தடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக பால் உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளரிடம் பெருமளவில் பால் கொள்முதல் செய்து வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு பால் கொள்முதல்
2019 ல் 2.3 லட்சம் லிட்டர்களாக இருந்தது 2024 ல் இன்று 1.10 லட்சம் லிட்டர்களாக குறைந்துள்ளது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 35-, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 42- அளிக்கப்படுகிறது.
ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்திட பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும். தீவனம் விலை உயர்வு காரணமாக, கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.எனவே பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மானிய விலையில் தீவனம், ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வசதி ஆகியவற்றின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க அரசு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
ஜூன் 28,29 தேதிகளில் ஒகேனக்கல்லில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

