நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் இவ்வளவா!
இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் நபர்கள் மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லும் முக்கிய பங்கு இவர்களுக்கு உள்ளது. நமது நாட்டின் நிர்வாகத்தை திறம்பட கையாள்வதும், மக்களுக்கான சட்டங்களை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் இடத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு மிக அதிகம். இந்த பணியை சிறப்பாக செய்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் என்று இந்திய அரசு வழங்குகிறது.
தற்போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ. 50,000 என்கிற வீதம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த அடிப்படை சம்பளம் 2010ஆம் ஆண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். மேலும் அவர்களின் சம்பளம் 5 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் படிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வதற்கும், குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்குமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2,000 படி வழங்கப்படுகிறது. இந்த படிகள் அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு மேலாக வழங்கப்படும் தொகையாகும்.

தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஸ்டேஷனரி செலவுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உள்பட அலுவலக செலவுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அத்தோடு எம்பியாக தேர்வாகும் நபர்களுக்கு டெல்லியில் தங்குவதற்க்கு வீடு வழங்கப்படுகிறது. முதல் முறையாக எம்பியானால் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பும், சீனியர் எம்.பி என்றால் தனி வீடாக வழங்கப்படும். அதற்கு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியது இல்லை. வீடுகளில் 2 லேண்ட்லைன், ஒரு செல்போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. அளவில்லா இணையதள வசதியை எம்பிக்கள் பயன்படுத்தலாம். 4000 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர எம்பிக்கள் கார்களில் பயணம் செய்யும்போது எம்பிக்களுக்கு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்கப்படுகிறது. மாதம் ரூ.500 மருத்துவ பரிசோதனைகளுக்கு வழங்கப்படுகிறது. விமான பயணம் எனில் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டும் செலுத்தினால் போதும். ரயில் பயணம் என்றால் ஏசி ஸ்லீப்பர் அல்லது பிசினஸ் வசதி இலவசம். இதன்மூலம் ரயில் பயணம் முழுவதும் இலவசமாகும்.

இது எம்பி மட்டுமின்றி அவருடன் செல்லும் உதவியாளர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பொருந்தும் . அதோடு எம்பிக்களின் குடும்பத்துக்கும் சில சலுகைகள் உள்ளன. எம்பிக்களின் மனைவி தங்களின் வீட்டில் இருந்து டெல்லிக்கு பயணித்தால் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் கட்டண சலுகையுடன் பயணிக்கலாம். நாடாளுமன்றம் நடக்கும்போது எம்பிக்களின் மனைவி விமானங்களில் கட்டண சலுகைளுடன் 8 முறை பயணிக்கலாம். மேலும் எம்பியாக பதவி வகித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் பென்சன் வழங்கப்படும். 5 ஆண்டுக்கு மேல் எம்பியாக இருந்தால் ஆண்டுக்கு இந்த பென்சன் தொகை என்பது ரூ.800 அதிகரித்து வழங்கப்படும்.

