அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ/ மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில விருப்பம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வியல் கலை, கிராமியக்கலை, கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம். நவீன சிற்பம். கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு ரூ.750/-வீதம் மதிப்பூதியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியதில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லூரிகள், அக்கல்லூரி தேர்வு செய்துள்ள கலை மற்றும் பயிற்சி நடைபெற உள்ள நாள் மற்றும் நேரம், விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விவரங்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையத்தளத்தில் www.artandculture.tn.gov.in பதிவிடப்பட்டுள்ளது. கலை ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பகுதி நேரப்பணிக்கு 25.06.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

