18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கிவிபத்துஏற்படுத்தினால்அவர்களின் பெற்றோர்களுக்கு சட்டத்தின்படி, தண்டனை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2024 வரை நான்கு மாதங்களில் மொத்தம் 509 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில், உயிரிழப்பு விபத்துக்கள் 125 ஆகும். மேற்கண்ட உயிரிழப்பு விபத்துக்களில் 132 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றில், இருசக்கர வாகனத்தில் மட்டும் விபத்துக்குள்ளாகி 64 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 180 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட மொத்த விபத்துக்களில் சுமார் 50% இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளாகும். இது கடந்த வருடத்தை விட அதிகமாகும். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாமல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கியது அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் 18 வயது நிரம்பாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதே காரணம்.
வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக வேகம் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும், மிதமான வேகம் பாதுகாப்பான பயணத்திற்கு உதவியாக இருக்கும் என்பதை அனைவரும் உணரும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதோடு, விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவரமாக மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இது குறித்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உரிய விழிப்புணர்வு வழங்கி 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனத்தை ஓட்ட தங்களின் குழந்தைகளை அனுமதிக்ககூடாது என அறிவுறுத்தப்படுத்தப்பட்டது. மேலும், இது போன்று 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தினால் அவர்களுடைய 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாது. மேலும், பெற்றோர்களுக்கும் தண்டனை உண்டு எனவும் எச்சரித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதாலும், சாலை விதிகளை முழுமையாக பின்பற்றாமலும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், நான்கு சக்கர ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. விபத்தினால் ஒருவர் இறக்க நேரிட்டால், அவரை சார்ந்துள்ள அக்குடும்பமே பாதிக்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. விலை மதிப்பற்ற உயிரை பாதுகாக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் இயக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் மற்றும் அபராதம் விதிக்கவும் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் விபத்துக்களை குறைப்பதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முயற்சிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

