கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன் பொதுச் செயலாளர் கே. முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
கலைஞரின் கனவு இல்லம்
தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக 6 ஆண்டுகளில் 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் மாநிலம் முழுவதும் கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைஞரின் கனவு இல்ல திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமான செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு நீண்டகால வீட்டுவசதி கடன்கள் வழங்குவதற்கென்றே பிரத்யேகமாக தமிழகம் முழுவதும் 650- க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்கள் வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களுக்கான கடன் தொகையை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கதாகும்.
புத்துயிர் பெறும்
ஏனெனில், வீட்டுவசதிக் கடன்கள் நீண்டகால தவணைகளை கொண்டதாக இருந்தால் மட்டுமே எளிய மக்கள் பயன் பெற முடியும். ஆனால், தற்போது கலைஞரின் கனவு இல்ல திட்ட கடனின் தவணை காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயனாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே, சுமார் 12 லட்சம் வீடுகளுக்கு நீண்டகால கடன்கள் வழங்கிய அனுபவம் கொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான கடன்கள் வழங்கப்பட்டால் இச்சங்கங்கள் புத்துயிர் பெறுவதோடு 5 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் மறு வாழ்வு பெறுவர். எனவே கலைஞரின் கனவு இல்ல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

