பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்க வேண்டுகோள்
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் குறித்து பயணிகள் உடனடியாக புகாரளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து துறைக்கு அதிகபடியான புகார் வரும் பிரச்சனையாக இருப்பது பெருந்துகள் நிறுத்ததில் நிற்காமல் செல்வதுதான். இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கு இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளது. 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தகுந்தது. பேருந்து பயணிகளை நிறுத்தங்களில் முறையாக ஏற்றி, இறக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்லும்போது, உடனடியாக 149 எனும் புகார் எண்ணில் பயணிகள் புகாரளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக x வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், “அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால், பேருந்து வழித்தட எண், பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு சென்றது, நேரம், எந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை என்ற விவரத்தை 149 என்ற எண்ணில் பயணிகள் உடனடியாக புகாரளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

