2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம்
18வது மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 13 மாநிலங்கள் 88 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.
கேரளாவின் 20 தொகுதிகள்; கர்நாடகாவின் 14 தொகுதிகள்; ராஜஸ்தானின் 13 தொகுதிகள்; மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகள்; மத்திய பிரதேசங்களில் 7 தொகுதிகள்; அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள்; மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகள்; ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிப்புரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 7 மணி நிலவரப்படி…
இன்றைய தேர்தல் வாக்குப்பதிவில் 61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.04 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 54.85 சதவீதமும் பதிவாகி உள்ளது. 6 மணி நிலவரப்படி மணிப்பூரில் 77.18 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 71.84 சதவீதமும், சத்தீஸ்கரில் 73.55 சதவீதமும், அசாமில் 71.11 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 71.91 சதவீதமும், கர்நாடகாவில் 68.8 சதவீதமும், கேரளாவில் 65.59 சதவீதமும், ராஜஸ்தானில் 64.07 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 57.62 சதவீதமும், மகாராஷ்டிராவில் 55.57 சதவீதமும், பீகாரில் 55.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

1 தொகுதியில் மட்டும்…
மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

