நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்
காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட் தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி காந்தி போல் வேடம் அணிந்து வந்த ரமேஷ் டெபாசிட் தொகையான ரூ. 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
