சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்
2010 ம் ஆண்டு முதல் மார்ச் 20 ம் தேதி உலகசிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக உள்ளது. அதனால் தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.

வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் சிட்டுக்குருவி பறந்து செல்லும்
அப்போதைய ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய கீச்கீச் ஒலி நம்மை சிலிர்க்கச்செய்யும். நாகரீகமான இந்த காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், அந்தச்சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. உண்மையில் அவை மனிதனை அண்டி வாழும் பறவையினமாம்.
கோடை காலங்கள் துவங்கிவிட்டதால் பறவைகளுக்கு வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது கிராமங்களில் வழக்கமாக உள்ளது.

டில்லியின் மாநில பறவை சிட்டுக்குருவியாகும் .
உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவியினங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன. உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, உரிமையானது. அதனால்தான், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் என்றார் ராமலிங்க அடிகளார். நாள்தோறும் தமது வாழ்வுக்காக சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஒருவேளை அது முட்டையிட்டாலும் அதன் கருவானது முழு வளர்ச்சியை அடைவதில்லை. அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன.
இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் 13 ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவியானது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது.
மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து வாழும் சிட்டுக்குருவி இனத்தை அழிவுப்பாதையில் இருந்து பாதுகாப்போம்.

