தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் 2024-க்கான வாக்கு எண்ணும் மையமான செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் அதற்கான பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கி.சாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரில் விளக்கப்பட்டது. நேற்று முதல் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் தேர்தல் முடிந்தவுடன் செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட உள்ளது.
ஜூன் மாதம் 4ம் தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்க்கு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான செட்டிக்கரை தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வாக்கு எண்ணிக்கை மையத்தில் அறைகளின் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குடிநீர்வசதி,கழிப்பறை வசதி,மின்சார வசதி உள்ளிட்ட போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் ,தருமபுரி மதிகோண்பாளையம் ,ராமக்கால் ஏரி, தடங்கம் ஆகிய இடங்களில்; பாராளுமன்றத் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள்ஆய்வு செய்ததை ஆட்சியர் பார்வையிட்டார்
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர் மேட்டூர் சார் ஆட்சியர் என்.பொன்மணி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொதுப்பணித்துறை ,உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

