110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கி, ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை காப்பீட்டுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்புள்ள தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, தையல் இயந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடையை சிறப்பாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முன்னதாக, ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை காப்பீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
தேசிய கால்நடை இயக்கம் (NLM) நிதி உதவியுடன் கால்நடைகளுக்கு மானிய விலையில் கால்நடை காப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் தங்களின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, ஆவின் பொது மேலாளர் மரு.கே.மாலதி, உதவி பொது மேலாளர் மரு.குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

