வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த மலைப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின்படி விரிவாக்கம் செய்யப்பட்டு, தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் வத்தல் மலைப்பகுதியின் மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கான முதல் பேருந்தினை அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் முன்னிலையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பின்னர் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அதுல்ஆனந்த் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இதுவரை பேருந்து வசதியே இல்லாத தருமபுரி மாவட்டம் வத்தல்மலைக்கு, முதன்முதலாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் கடந்த 13.08.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை பகுதியானது தருமபுரியிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைகிராமமாகும். இந்த கிராமத்தின் மலை அடிவாரம் தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 8 மலை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வத்தல் மலைப்பகுதி மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கான முதல் பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
தருமபுரி அறிவுசார் மையம் ஆய்வு

முன்னதாக, தருமபுரி நகராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் க.செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

