ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி:ஜப்பான் குழுவினர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பென்னகாரம் வட்டம், பருவதனஅள்ளியில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ஆம் கட்டம் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து ஜப்பான் குழுவினர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் ஆனந்த் மோகன்,மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி முன்னிலையில் மார்ச்-11 இன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.01.2022 அன்று காணொலி வாயிலாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவை உயர்த்தி வழங்குவதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2-ஆம் கட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 251 ஊராட்சிகளிலுள்ள 2020 ஊரகக் குடியிருப்புகளுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் மாநகராட்சி கிருஷ்ணகிரி நகராட்சி 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலுள்ள 3074 ஊரக குடியிருப்புகளுக்கும். ஆகமொத்தம் மாநகராட்சி 2 நகராட்சிகள் 16 பேரூராட்சிகள் மற்றும் 6802 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் அளவை உயர்த்தி வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 19.18 இலட்சம் நபர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056ம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 21.29 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 105.02 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
2041-2056 ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 18.42 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 154.11 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056ம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 20.54 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 190.93 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
41.83 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 304.83 மில்லியன் லிட்டர் குடிநீர்
இவ்விரு மாவட்டங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 37.60 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 251.60 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056-ஆம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 41.83 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 304.83 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

ஒரு நபருக்கு 70 லிட்டரிலிருந்து 135 லிட்டராக உயர்வு
இரு மாவட்டங்களிலும் உள்ள ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போதைய குடிநீர் வழங்கும் அளவான நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 30 லிட்டரிலிருந்து 55 லிட்டராகவும், பேரூராட்சி பகுதிகளுக்கு 50 லிட்டரிலிருந்து 70 லிட்டராகவும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு 70 லிட்டரிலிருந்து 135 லிட்டராகவும். அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.7890.00 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் – 2 ம் திட்டம்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழில் நுட்ப குழுவின் குறிப்புரைகளுக்கேற்ப ரூ.7890.00 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்பநிலை திட்ட முன்மொழிவு அறிக்கை (Preliminary Project Proposal Report (PPPR)) பன்னாட்டு நிதி உதவி பெறும் திட்டத்தின் (External Aided Project (EAP)) கீழ் நிதியுதவி பெற இந்திய அரசின் இணையதளத்தில் முன்மொழிவு பதிவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழு கூட்டத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பீடு JICA ன் (Jappan International Cooperation Agency) கள ஆய்வு 11.03.2024 அன்று நடைபெற்றது. இத்திட்டத்திற்கான நிதி ஆதாரம் மற்றும் அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்ற பின் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஒகேனக்கல்லில் தலைமை பணியிடம் கட்ட தேவையான அரசு நிலம் ஒதுக்கீடு அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிலம் ஒதுக்கீடு அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்திற்காக வனத்தில் குழாய்கள் அமைக்கும் பாதை நீருந்து நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட நில அனுமதியும் விரைவில் பெறப்பட உள்ளது.
இந்நிகழ்வில் ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், சங்கரன், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளரச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

