மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
தருமபுரிக்கு மார்ச்-11 ல் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவதாக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மார்ச் 11-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தருகிறார். இக் கூட்டத்துக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை மாநில வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 11-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தருகிறார். இந்த விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதியத் திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இவ்விழாவில் அறிவிக்கப்படலாம். தருமபுரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் சற்றேறக்குறைய ரூ.8 ஆயிரம் கோடியில் தொடங்குவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்துக்கான தொடக்கநிலை பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் தருமபுரிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்பட மகளிர் முன்னேற்றத்துக்கான எண்ணற்றத் திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார்.
இந்த ஆய்வின் போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,
திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), முனைவர் பி.பழனியப்பன் (மேற்கு), அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

