குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.
வேப்பிலை அள்ளி கிராமத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் வட்டம், வேப்பிலை அள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள ஜெர்தலாவ் கிளைக் கால்வாய் பகுதியில் வசித்து வரும் சுமார் 30 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளைக் கிணறு அமைத்து இதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆழ்துளை கிணறு சிறுமின்விசை பம்பு மூலம் நீரேற்றி குடி நீர் வழங்க புதிதாக 1000 லிட்டர் குடிநீர்த் தொட்டி அமைக்கப் பட்டது. புதிய குடிநீர்த் தொட்டி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வழங்கப்படவில்லை. இப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மின்மோட்டாரை பழுதுபார்க்க எடுத்துச் செல்வதாக கூறி ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுத்துச்சென்று பல மாதங்களாகியும் மின்மோட்டார் பொருத்தவிலலை. கோடைக்காலம் துவங்கி விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் டேங்கர் லாரி மூலம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வழங்க வேண்டும், என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர்த் தொட்டி அருகில் போராட்டம் நடத்தினர்.

