தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்
அரூரை அடுத்த தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூர் – கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் 13- ஆவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீர்த்தமலை (தீர்த்தகிரி மலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார்.
அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும்.ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர்ஆகியோர் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திருக்கோயில் மாசிமக
தேர்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து
புதன்கிழமை (பிப்.28) இரவு 9 மணியளவில் சுவாமிகள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர் திருவிழாவில்,
அருள்மிகு விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் திருத்தேர்கள் கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருந்தன.தொடர்ந்து, பக்தர்கள் பொரி, உப்பு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவ தானியங்களை தேர்கள் மீது இறைத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமிகளை வழிபட்டனர்.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மூன்று தேர்களும் கோயிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன.
இந்த தேர்திருவிழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர் திருவிழாவுக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த விழாவில் கோட்டாட்சியர் ரா.வில்சன் ராஜசேகர், அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் பொன்மலர் பசுபதி, பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா து.தனபால், திமுக நகர செயலர் முல்லை ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரளா சண்முகம், செயல் அலுவலர் சொ.பிரபு, உதவி ஆணையர் மா.உதயகுமார், அரசு மருத்துவர் ஏ.இசைத்தமிழ், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ குழுவினர், தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
