புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு மிகப் பிரமாண்டமாக,காட்சியளிக்கிறது. கலைஞரின் குழந்தை பருவம் முதல் அவரது அரசியல் பயணம் வரை இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. இவர் 95ம் வயதில் 2018 ஆகஸ்டு 7ம் தேதி மறைந்தார். இவருக்கு அண்ணா நினைவிடம் அருகில் நினைவிடம் அமைந்துள்ளது.

அண்ணா, கலைஞரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா சிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் உள்ளன.இருபுறங்களிலும் பசுமையான புல்வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது. அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. அண்ணா சதுக்கத்தை கடந்து சென்றால் கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை காணப்படுகிறது. எதிரே கலைஞர் சதுக்கம். ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ எனும் தொடர் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.
சதுக்கத்தின் பின்புறம் கலைஞர் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிர்கிறது. சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன. கீழே நிலவறைப் பகுதியில், ‘கலைஞர் உலகம்’ எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் பகுதியில் இடப்புறம் சென்றால் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது.
அருகில், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை உள்ளது. அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சியளிக்கிறது. அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம். இதன் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கு கிடைக்கும்.

தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். பொதுப் பணித் துறையால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து,
புதுப்பிக்கப்பட்ட அண்ணா , கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (திங்கள்) மாலை 7 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

