“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் 2வது நாளாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சின்ன ஏரியில் அம்ரூத் 2.0 (2022-2023) திட்டத்தின் கீழ், ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளின் இயக்க நேரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனைதொடர்ந்து, பாப்பாரப்பட்டிம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட குடிநீரில் உள்ள குளோரினேசன் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டுமெனவும், சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது உறுதிசெய்திட வேண்டுமெனவும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுகள் தயார் செய்யப்பட்டுவருவதையும், உணவின் சுவை குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்கள். தொடர்ச்சியாக, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுதேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2022-2023)-ன் கீழ், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணிகளையும், அ.பாப்பாரப்பட்டியில் இயங்கிவரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் கொள்முதல் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பென்னாகரம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் காலை 9.00 மணி முதல் இன்றைய தினம் காலை 9.00 மணி வரை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டுமெனவும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தரமானதாக இருக்க வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
