4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.
பஞ்சப்பள்ளி,சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தண்ணீர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2023-24 (பசலி 1433) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிப்-22 முதல் பழைய ஆயக்கட்டு பகுதி 4 ஏரிகளை நிரப்பியும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறைவைத்து 15 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 15 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 105 நாட்களுக்கு பிப்-22 முதல் 05.06.2024 வரை) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2023-24 ஆம் (பசலி 1433) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு மொத்தம் 4500.00 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பயன்பெருகின்றன. பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் (மேல்பெண்ணையாறு வடிநில கோட்டம்) செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.பாபு, உதவிப் பொறியாளர் (சின்னாறு அணைப்பிரிவு) சாம்ராஜ், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பஞ்சப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

