உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கும் மற்றொரு திட்டமாகும்.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் இன்று பிப்- 21காலை 09.00 மணி முதல் நாளை பிப்-22.காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.
கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு
பென்னாகரம் வட்டம், நாகதாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, திடீரென ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
நாகதாசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

இதனைதொடர்ந்து, நாகதாசம்பட்டி அங்கன்வாடி மையம் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்தும்,ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கெட்டூர் பகுதிநேர நியாய விலை கடை ஆய்வு
ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் கெட்டூர் பொது விநியோக திட்ட பகுதிநேர நியாய விலை கடை, ஆய்வு செய்த பின் கெட்டூரில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் காலிஃப்ளவர் பயிரிடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஆய்வு

ரங்காபுரம் பகுதியில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம் மானியம், ரூ. 3.50 இலட்சம் விவசாயி பங்களிப்பு என ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள டிராக்டர் இயந்திரத்தினை ஆட்சியர் பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார்கள். மேலும், இப்பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

இதனைதொடர்ந்து, தித்தியோப்பனஅள்ளியில் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர், மாணவர்களிடம் கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்தார்,
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தகௌரவ் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தகாயத்ரி, மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேசன், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், விமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

