சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
– தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு
திராவிடப்பண்பாடு எனக் கொண்டாடப்படும் சிந்துவெளிப் பண்பாடு பற்றிய கண்டுபிடிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு இது. ஹரப்பா மொகஞ்சோதாரா பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை ஆய்வுக்குட்படுத்தி இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கே செழித்திருந்தது சிந்துவெளிப் பண்பாடு என்று 1924 செப்டம்பர் 20ஆம் நாள் உலகுக்கு அறிவித்தார் அப்போதைய இந்திய தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைமை இயக்குனரான சர்.ஜான் மார்ஷல்.
சிந்துவெளிப் பண்பாட்டை சிந்து சரஸ்வதிப் பண்பாடு எனத் திருத்தி அதன் பூர்வகுடிகளாக ஆரியர்களை பதுக்கிவைக்கும் வரலாற்றுத்திரிபும் மோசடியும் முனைப்படைந்துள்ள இக்காலத்தில் சிந்துவெளிப் பண்பாட்டின் உண்மை வரலாற்றை மக்களிடையே பரப்பும்வகையில் நூற்றாண்டுவிழாவினை மாநிலம் முழுவதும் நடத்துவதென தமுஎகச அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிகழாண்டின் நிதிநிலை அறிக்கையில் “சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை தமுஎகச பாராட்டி வரவேற்கிறது. என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர்
மதுக்கூர் இராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ஆகியோர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்

