மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சென்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்ய எந்த நிபந்தனையும் இன்றி வங்கிக்கடன் வழங்கவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, உடனடியாக வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு,இலவசவீட்டுமனைபட்டா வழங்குவதில், முன்னுரிமை வழங்கவேண்டும்.பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள், பேருந்து நடத்துனரால், மாற்றுத்திறனாளிகள் அமர நடவடிக்கை எடுக்கவேண்டும்.ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க தனிவரிசை ஏற்படுத்தவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தும் போது அனைத்து துறைசார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று உரிய பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் அட்டையை ஏஏஒய்க்கு மாற்றம் செய்யவேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். என பேசினார்.இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கார்ல் மார்க்ஸ்,கே.சுசிலா தமிழ்மணி,மாரியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
