பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஒட்டு மொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்கிட வேண்டும். 1.4.2003க்கு முன்னர் பணியில் சேர்ந்து பின்னர் பணி நிரந்தரப் பெற்றவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும்.
தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், பட்டு வளர்ச்சித்துறை தொழிலாளர்கள். ஆதிதிராவிட நலத்துறை துப்புரவு பணியாளர்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர் களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கென தனித் துறை உருவாக்கிட வேண்டும், அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்கிட வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய விகிதம் நிர்னாயித்திட வேண்டும்.
ஏற்கனவே நடப்பில் இருந்து தொழிற்சங்க சட்டங்களை நடை முறைப்படுத்தி டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் பதவி உயர்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும்.ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண். 113, 139, 155-யை ரத்து செய்ய வேண்டும்.
எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் 30% அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ அதை போனஸாக வழங்கிட வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும்.
அரசு பணியாளர்களுக்கும் தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும்.சாலைப் 41 மாதப் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிலெடுத்துக் கொண்டு பணப் பயன்களை வழங்க வேண்டும்.காப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து மருத்துவ மனைகளிலும், அனைத்து நோய்களுக்கும்காப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜான்ஜோசப் தலைமை வகித்தார்.
மாநிலசெயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடைபணியாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார்,அங்கன்வாடி பணியாளர் சங்க தலைவர் கவிதா , தருமபுரி வட்ட தலைவர் லட்சுமிபதி, பென்னாகரம் வட்ட தலைவர் பச்சமுத்து, வட்டசெயலாளர் சங்கு பாலன்,மொரப்பூர் வட்டதலைவர் வஜ்ரவேல்,அரூர் வட்டதலைவர் அன்பழகன், நல்லம்பள்ளி வட்டதலைவர் ஹரி,வட்டசெயலாளர் சபாபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மறியலில் பங்கேற்ற அரசு பணியாளர்களை தருமபுரி நகர போலீசார் கைதுசெய்தனர்.
