குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்:விண்ணப்பங்கள் வரவேற்பு.
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவில் காலியிடமாக உள்ள 1 தலைவர், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.
விண்ணப்பதார்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், அல்லது சமூகப்பணி அல்லது சட்டம் அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சமூகப்பணி அல்லது சட்டம், சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு நபர் குழந்தைகள் நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.
இதற்கான விண்ணப்பபடிவத்தை தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர்,சமூகப்பாதுகாப்புத்துறை எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,சென்னை – 600 010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

