கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் ”பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய தருமபுரி மண்டல மாநாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளையும் என் பிள்ளைகளாகவே நான் கருதுகிறேன். படிப்பில் பின் தங்கிய அனைவரும் என் செல்ல பிள்ளைகளே அதனால் தான் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான இந்த தருமபுரி மாவட்டத்தில் இந்த பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மண்டல மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கும் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் அப்பள்ளிக்கு வழங்கிய பல்வேறு பெருட்களை சீர்வரிசை பொருட்களாக இங்கு சுமார் 201 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர். இது மிகுந்த பாராட்ட கூடிய ஒன்றாகும். போராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 3,000 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இருந்து தைய்வான் அரசின் கல்வி உதவிதொகையுடன் அந்நாட்டின் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாணவர்களில் நமது தமிழ்நாட்டை சேர்ந்த 2 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது பெருமைக்கூறிய ஒன்றாகும். கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்! இங்கு வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் திட்டங்களுக்கு ஆதரவளித்து அறிவு சார்ந்த சமுதாயத்தினை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்கள் மற்றும் நூலகத்தினை சென்னையில் இருந்து திறந்து வைத்ததற்காக தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ”பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” தருமபுரி மண்டல மாநாட்டில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகளுக்கு தங்களது நிலம், அதிக அளவிலான நிதி , பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 100 நன்கொடையாளர்களுக்கு கேடையங்களை வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமா ர், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

