உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது:
முடங்கிப் போன இந்திய ஜனநாயகம் நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிப்ரவரி 15, 2024 அன்று, மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முகம் தெரியாத அனோமதய நபர்களிடமிருந்து தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்ற முயல்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு மறைமுகமாக உணர்த்தியது.
இத்தகைய சந்தேகத்திற்குரிய தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தின் மூலம் பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.6,565 கோடியை பா.ஜ.க பெற்றுள்ளது யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நிதிக்கு ஈடாக அவர்களுக்கு என்ன பிரதிபலன் கிடைத்தது? அது யாருடைய பணம்? இந்தக் கேள்விக்கான பதில் இந்திய மக்களுக்குத் தெரியவில்லை. அதனால், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் மார்ச் 13 ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மோடி அரசு சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. உச்சநீதிமன்ற கண்டனத்தால் அவமானத்துக்குள்ளாகியுள்ளது. அப்படியென்றால், மோடி அரசு என்ன தான் செய்தது? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கினர். காங்கிரஸ் கட்சி அதன் வங்கிக் கணக்கை பயன்படுத்த முடியாது என்றார்கள். காங்கிரஸ் கட்சி தனது சொந்தப் பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்த முடியாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
பாஜகவைப் போல் அல்லாமல், ஆன்லைன் வங்கிக் கணக்குகள் மூலம் நான்கு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்களிடமிருந்து வெளிப்படையான முறையில் நன்கொடையை காங்கிரஸ் கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்பட்டது? மாண்புமிகு உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டத்திற்கு எதிரான நிதி என்று கூறிய பிறகும் பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்படவில்லை? மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை மட்டும் முடக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தையும் முடக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி அழிந்து வருவதாக அறியப்படுகிறது. நிவாரணம் கேட்டு காங்கிரஸ் கட்சி உடனடியாக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியது. காங்கிரஸ் கட்சியை வங்கி கணக்கை இயக்க அனுமதிக்குமாறு மோடி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே இப்போது நம்பிக்கை தருவது இந்தியாவின் நீதித்துறை தான். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் ஒரே கேள்வி, “காங்கிரசை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்” என்பது தான். இவ்வாறு தெரிவித்தார்.

