ஒசஹள்ளி ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 50 க்கும் மேற்பட்ட பெண்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த ஒசஹள்ளி ஊராட்சிக்குபட்ட வேடியூர் பெருமாள்கோவில்பட்டி பகுதிகளுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக தகவல் வெளியானது .எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வரும், மிக முக்கிய சாலையாக உள்ளது. மேலும், டாஸ்மாக் கடை திறக்கபட்டால், விபத்துகள், வன்முறை சம்பவங்கள் உள்ளிட்டவை அதியளவில் நடக்கும் சூழல் உள்ளது. எங்கள் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமான விவசாய விளைநிலங்கள் பாதிப்படையம். இதனால், அரசு டாஸ்மாக் கடையை அனுமதிக்க கூடாது என மனுவில் தெரிவித்திருந்தனர். மனு அளிக்க வந்த பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின், அம்மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மேலும், எதிர்ப்பை மீறி கடை திறக்கப்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை தொடங்குவோம் என கூறினர்.

