தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2024-25 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
வளம் சார்ந்த கடன் திட்டம் விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும் உதவிடும் வகையில் வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ. 16714.33 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட கடன் திட்ட அறிக்கையானது, பல அரசு துறைகள் , வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ச.பத்ஹீ முகம்மது நசிர், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பா.கார்த்திகை வாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி மேலாளர் ரமேஷ், வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

