விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத அமைப்பு) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஒன்றிய அமைச்சர்கள் உடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அதனால் விவசாயிகள் டெல்லி நோக்கி நடைப்பயணத்தை மேற்கொண்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் என்பது குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட ரீதியிலான உத்தரவாதம். விசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் சில ஆண்டுகள் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை பதிவு செய்திருந்த பல வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். லக்கிம்பூர் கெரி வன்முறை, நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 மறுசீரமைப்பு செய்தல், உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுதல், முந்தைய போராட்டங்களில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் விவசாயிகள் வைத்துள்ளனர்.

இந்த விவசாயிகள் போராட்டம் குறித்து மதுரா சுவாமிநாதன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவம்பர் 2021 இல் எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கையைப் பகிர்ந்துள்ளார், அதில் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவர் புகழ்பெற்ற இந்திய வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளாவார். இவர் பெங்களூருவின் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் தலைவராக இருந்து வருகிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் பாராட்டு விழா தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரது மகள் மதுரா சுவாமிநாதன், ‘தனது தந்தை சுவாமிநாதனைக் கௌரவிக்க வேண்டும் என்றால், நாட்டில் உள்ள விவசாயிகளை இணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் ‘ என்று வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில் தொடர்ந்து பேசியவர், “பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். பத்திரிகைகளில் வெளியாகி உள்ள செய்திகளின்படி, ஹரியானாவில் அவர்களுக்காகச் சிறைகள் தயார் செய்யப்படுவதாகத் தெரியவருகிறது.

இவர்கள் அனைவரும் விவசாயிகள். அவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல” எனக் காட்டமாக மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். மேலும் அவர், “இந்தியாவில் இருக்கின்ற முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அன்னதாதாக்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,. அவர்களைக் குற்றவாளிகளைப் போலக் கருதக் கூடாது. போராட்டத்திற்கான தீர்வுகளை நாம் காண வேண்டும். இது எனது வேண்டுகோளை அரசுக்கு தெரிவித்துள்ளார்.

