இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம்
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அரசாணை நிலை எண். 163 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறையின் அறிவிப்பு நாள். 12.12.2023-ன்படி கீழ்கண்ட இடங்களில் டிசம்பர்- 2023 முதல் பிப்ரவரி-2024 வரை இராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நேரடி இராகி கொள்முதல் நிலையம் செயல்பட்டுவரும் இடங்கள்.
1- தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைகூடம் திருப்பத்தூர் மெயின்ரோடு, மதிகோண்பாளையம் தருமபுரி
2- பென்னாகரம் வட்ட, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்ககட்டிடவளாகம் வண்ணாத்திப்பட்டி, -636 813
3- அரூர் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அரசு மருத்துவமணைஅருகில்,தருமபுரி மெயின்ரோடு, அரூர் வட்டம் -604 408
தற்போது கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அறிவிப்பு நாள் : 01.02.2024-ன்படி டிசம்பர்- 2023 முதல் ஆகஸ்ட்-2024 வரை இராகி கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் ராகி அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகள் இராகி இருப்பு வைத்துள்ள சிறு/குறு விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறு/குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஒளி நகல்கள் (Xerox Copies) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டுவரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வரவேண்டும். மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.38460/- (கிலோ ஒன்றுக்கு ரூ.38.46) என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மாலை 2.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் செயல்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த அரிய வாய்ப்பினை ராகி சாகுபடி செய்த சிறு /குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் மண்டல மேலாளர் அலைபேசி எண் 94439 38003, மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் 04342-231345 என்ற தொடர்பு எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

