விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்!
தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துளளதாவது:
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.
கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டமானது தொடங்கியது. பாசிச மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த்தியாகத்தால் ஓர் ஆண்டிற்கும் மேலாக நீடித்து வந்த போராட்டம் மோடி அரசை அடிப்பணிய வைத்தது. பின்னர் மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.
தொடர்ந்து, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது, மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி அரசு ஏற்றிருந்தது.
ஆனால், அக்கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்த விவசாய சங்கங்கள், தற்போது மீண்டும் டெல்லி முற்றுகை போராட்டத்தை அறிவித்ததோடு, 13.02.2024 அன்று டெல்லியை நோக்கி கிளம்பியது.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், டெல்லியை நோக்கியை புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பாசிச பாஜக அரசு. அதாவது, டெல்லி -அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் டெல்லியை நோக்கி வந்த விவசாயிகள் மீது அரியானா காவல்துறை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
அதேசமயத்தில், விவசாயிகள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதற்காக சாதகமாக அரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த போன்ற கிராமங்களில், கடந்த 2 நாட்களாக, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சலோ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற கர்நாடக விவசாயிகளை, போபால் இரயில் நிலையத்தில் வழிமறித்து தாக்கியுள்ளது அந்நகர காவல்துறை. மேலும், விவசாயிகளின் தொலைபேசிகளை பறித்து அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுடன் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது.
சண்டிகரில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது யூனியன் பிரதேச நிர்வாகம். டெல்லியை சுற்றியுள்ள டெல்லி- உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, வாகனங்கள் டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்ப்பதற்காக, முயன்று வரும் மோடி அரசு, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமனது, அமைதியான வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதன்படி, தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடும் விவசாயிகளை கைது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு, விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, இணையத்தை முடக்குவதும், 144 தடை விதிப்பதும், தடியடி நடத்துவதும் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற ஐயம் எழுகிறது.
எனவே, பாசிச பாஜகவிற்கு முடிவு கட்ட நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும், தமிழ்நாடு அரசும், மாண்புமிகு முதல்வர் அவர்களும், ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
பாசிச பாஜக சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட, விவசாய சங்களும், மாணவர் அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும், ஒன்றைப் புள்ளியில் அணி திரள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

