தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா:
மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் 15.02.2024- அன்று மாபெரும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வருகின்ற 15.02.2024-ம் தேதியன்று தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் காலை 10.30 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா நடைபெற உள்ளது.
அவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகிகளும், மாணவர்களும் கலந்து கொண்டு கல்விக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
இக்கல்விக்கடனுக்கு தற்போது உயர்நிலைப் பள்ளியில், கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட இளங்கலை/இளம்அறிவியல் மற்றும் முதுகலை/முதுநிலை அறிவியல் சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் / மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருத்துவம், நர்சிங், பார்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.
கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533940, 8985533941 மற்றும் 04342-230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

