தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.

கூலி வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்து இரட்டை குவளை முறையை கடைபிடித்த மாமியார் , மருமகளை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. போளையம்பள்ளி கிராமம். இங்கு தலித் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ பிரியா – ராஜலிங்கம் , தம்பதியினரும் வேறு சமூகத்தை சேர்ந்த, கோபிநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவம் சின்னத்தாய், தம்பதியினர் ஆகியோர் கூட்டு சேர்ந்து அப்பகுதியில் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தில் பயிரிடப்பட்ட உளுவல் பயிர் அறுவடைசெய்வதற்காக, போளையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வி,மாரியம்மாள்,வீரம்மாள் ஆகியோர் பிப்-8 அன்று வேலைக்கு சென்றுள்ளனர்.வேலை செய்யும் பொழுது விவசாய தொழிலாளர்கள் குடிக்க டீ கேட்டுள்ளனர்.
சின்னத்தாயின் மருமகள், தரணி அவர்கள் வீட்டில் இருந்து டீ எடுத்து வந்துள்ளார்.அப்போது இவரது மாமியார் சின்னத்தாயிக்கு மட்டும் சில்வர் டம்ளரில் டீ கொடுத்துள்ளார்.
வேலைக்கு வந்த மற்ற மூன்று கூலி தொழிலாளர்களுக்கும் கொட்டாங்குச்சியில் டீ கொடுத்துள்ளனர்.
நாகரீகம் வளர்ந்த காலத்தில் கூட, கொட்டாங்குச்சியில் டீ கொடுக்க வேண்டுமா, என செல்லி கேள்வி கேட்டுள்ளார்.இதற்கு அவர்கள் ஏளனமாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து ஜாதிபாகுபாடு, இரட்டைகுவளைமுறை கடைபிடித்ததாக கூறி சின்னதாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது கூலி தொழிலாளி செல்லி கம்பை நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இச்சம்பவததை அறிந்த, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் போளையம்பள்ளிக்கு நேரில் சென்று கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் நடந்த சம்பவத்தை நேரில் கேட்டறிந்தனர்.
மேலும் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த சின்னத்தாய் இவரது மருமகள் மீது பிசிஆர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியது.
இதனிடையே செல்லி கொடுத்த புகாரை விசாரித்த கம்பை நல்லூர் காவல் நிலைய போலீசார், தலித் பெண்கூலி தொழிலாளர்களை சாதிய பாகுபாடு,இரட்டைகுவளை முறை கடைபிடித்த மாமியார் சின்னத்தாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது எஸ்சி / எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

