ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. எதிர்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு அளிக்க மறுப்பது. பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங்கீடு ஒதுக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டு கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்டு ஜனநாயக விரோத எதேச்சதிகார நடவடிக்கையினை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.இத்தகைய ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். திமுக நரக செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் சி.பழனியப்பன், மதிமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்ட செயலாளர் இராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஜெய்சங்கர், இந்திய கம்யூயினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் த.கு.பாண்டியன்,சி.கே.சாக்கன்சரமா,கருப்பண்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலகொள்கை பரப்பு செயலாளர் ஜி.அசோகன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் என்.சுபேதார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலகொள்கை பரப்பு செயலாளர் டி.தவமணி, இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ஏ.சிராஜீதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர்கள் முருகன் ,ராஜ்குமார், ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜெயசிங்,ஆகியோர் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில்:
கடந்த 2014 ம் ஆண்டு மக்களின் வருமானத்தை பெருக்குவோம்,விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது.அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்தது.இவர்கள் ஆட்சியில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விவசாயிகள் வாழவழியின்றி தற்கொலை செய்துகொண்டனர். 86 சதவீத விவசாயிகள் கடணை அடைக்க வழியில்லாமல் விவசாயத்தை கைவிட்டனர். வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக செயல்படுகின்றனர்.சிறுபான்மைமக்களான இஸ்லாமிய, கிறிஸ்துவ, மக்களை தாக்குகின்றனர். மணிப்பூரில் இனமோதலை ஏற்படுத்தி, பழங்குடி மக்களை அழிக்கின்றனர். அய்யோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுகின்றனர்.இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு மதவழிபாட்டு தளங்கள் எப்படி உள்ளதோ அப்படியே பாதுக்காக வேண்டும் என சொல்லப்பட்டது.
ஆனால் பிஜேபி அரசு மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிர்க்கவும், கருத்து,எழுத்து பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிக்கின்ற ஒன்றிய அரசாக செயல்பட்டு வருகிறது.

எதிர்கட்சியாக இருக்கிற இடங்களில் ஒன்றிய அரசால் பழிவாங்கப்படுகிறது.எனவே இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். ஜிஎஸ்டி வரிவசூல் ,தென்பகுதியில் உள்ள 5 மாநிலங்களில் மட்டும் ரூ 22 இலட்சத்து 26 ஆயிரத்து 984 கோடி ஒன்றிய அரசுக்கு செலுத்தியுள்ளனர். இந்த 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியது, வெறும் ரூ 6 இலட்சத்து 42 ஆயிரத்து 295 கோடியாகும். உத்திரப்பிரதேசத்தில் ஜிஎஎஸ்டி வரியாக செலுத்தியது 3 இலட்சத்து 41 ஆயிரத்து 761 கோடியாகும். ஒன்றிய அரசு திருப்பி வழங்கியது.ரூ 6 இலட்சத்து 91 ஆயிரத்து 375 கோடியாகும். உத்தரபிரதேச அரசுக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்கியுள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிதியை வழங்காமல் மாநில அரசின் குரலை நெறிக்கிறது. நாட்டின் இறையாண்மை ஜனநாயகத்தை பாதுகாக்க பிஜேபி அரசை தோற்கடிக்க மக்களிடையே தெருத்தெருவாக பிர்ச் சாரம் மேற்கொள்வோம் என பேசினார். திமுக ஒன்றிய செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.

