அரசு துறையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.தயாளன் தமிழக முதல்வர், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு அரசு ஊர்திகள் உள்ளன. இந்த வாகனங்கள் 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், தற்போது பயனற்ற வாகனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் புதியதாக ஜீப் மற்றும் கார்களின் வருகைக்காக அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு நிரந்த ஊர்தி ஓட்டுநர்களுக்கு பணி வழங்காமல், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கி வருகின்றனர். போதிய அனுபவம் இல்லமால் தினக்கூலி அடிப்படையில் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிவதால் அரசு உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மாதந்தோறும் ரூ.60 ஆயிரத்துக்கு கூடுதலாக ஊதியம் பெறும் ஓட்டுநர்களுக்கு வேலை வழங்காமல் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமனம் செய்து வாகனங்களை இயக்குவதால் தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்து பணிகள் வழங்குவதை கைவிட்டு, நிரந்தர பணியில் உள்ள அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
