தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடாசலம் (41) இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, சவுளூர் கிராமத்தில் உள்ள, மாந்தோப்பு ஒன்றில், பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வெங்கடாசலத்தை மர்மகும்பல் ஒன்று இரும்பு லாடால் தாக்கியதில், தலை மற்றும் உடலில் காயங்களோடு, வெங்கடாசலம் மயங்கி கிடந்தார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள், காயங்களோடு கிடந்த வெங்கடாசலத்தை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டு, சுமார் 20 நாட்களுக்கு மேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த வெங்கடாசலம், உடலில் எவ்வித முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு, வெங்கடாசலத்தை கொண்டு வந்து சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த வெங்கடாசலம், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடாசலம் உயிரிழப்பு சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடாசலத்தை அடித்து கொலை செய்த நபர்கள் குறித்து, தொப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கூலி தொழிலாளி வெங்கடாசலம், கொலை வழக்கு தொடர்பாக, பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் (50) என்பவரை, தொப்பூர் போலீசார், கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான சிவக்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

