தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து மொரப்பூர், கம்பைநல்லுார், காரிமங்கலம் வழியாக, கிருஷ்ணகிரிக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போதிய அளவில், பேருந்துகள் இயக்கப்படாததால், இந்த வழித்தடத்தில் வரும் பேருந்துகளில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகளவில் இருப்பதால், மக்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல், பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலையுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட காரிமங்கலம் வட்டத்தில் , மொரப்பூர், கம்பைநல்லுார் பகுதிகளை சேர்ந்த பல கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காரிமங்கலம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும்,காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லுாரிக்கு மொரப்பூர் பகுதியில் இருந்து மாணவியர் அதிகளவில் செல்கின்றனர். எனவே, அரூரில் இருந்துகாரிமங்கலம் வழியாக, கிருஷ்ணகிரிக்கு, கூடுதலாக பஸ்களை இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

