தற்போது தமிழக அளவில் ‘கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் இடத்தை தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?’ என்கிற கேள்விதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் கோயம்பேடு எதுவாக மாற போகிறது? என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடுக்கு அடுத்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து, பூந்தமல்லியிலும் பேருந்து நிலையம் வருவதாரக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அநேகமாக, ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படவிருக்கிறது. மார்க்கெட் முழுவதும் திருமழிசைக்கு இடம் மாறவிருக்கிறது. மார்க்கெட் இட மாற்றத்திர்க்கு பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘கோயம்பேட்டில் மிகப்பெரிய திட்டம் ஒன்று வரப்போகிறது’ என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில்… ‘குடியிருப்புகள்’, ‘ஐடி நிறுவனங்கள்’, ‘விளையாட்டு தொடர்பான கட்டுமானங்கள்’, ‘ஹை ரைஸ் கட்டடங்கள்’, ‘லூலூ ஷாப்பிங் மால்’ என்று பற்பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதையெல்லாம் தமிழ்நாடு அரசு மறுக்கவும் செய்திருக்கிறது.மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறந்த திட்டம் அமையவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘கோயம்பேடு பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், மார்க்கெட் மற்றும் கூடுதலாக உள்ள நிலம் அனைத்தையும் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர். இதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே மக்கள் பயன்பாட்டுக்கான பசுமைப் பூங்கா உருவாக்க வேண்டும்’ என்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

கொல்கத்தாவில், 480 ஏக்கர் எக்கோ பார்க் மற்றும் 400 ஏக்கர் மெய்டன் பார்க், லக்னோவில் 375 ஏக்கர் ஜனேஷ்வர் மிஷ்ரா பார்க், பெங்களூருவில் 300 ஏக்கர் ஸ்ரீ சமராஜேந்திரா பார்க் (கப்பன் பார்க்) மற்றும் 240 ஏக்கர் லால் பாக், டெல்லியில் 237 ஏக்கர் ஸ்வர்ண ஜெயந்தி பார்க், மும்பையில் 290 ஏக்கர் சென்ட்ரல் பார்க்… கான்கிரீட் கட்டடங்களால் மூச்சுத் திணறும் மெட்ரோபாலிட்டன் நகர மக்களின் நுரையீரலை, இத்தகைய பெரும் பூங்காக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், சென்னையில் அப்பிடிபட்ட பரந்துப்பட்ட பூங்காக்கள் இல்லை. 2 ஏக்கர், 5 ஏக்கர் அதிகபட்சமாக 10 ஏக்கர் என்கிற அளவில்தான் இங்கே பூங்காக்களே இருக்கின்றன. இருந்த பூங்காக்களும் கட்டிடங்களாக மாறி உள்ளது. அதிலும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகளுக்காக ஷெனாய் நகர் பூங்கா, பனகல் பூங்கா, நேரு பூங்கா என இடம் எடுக்கப்பட்டது. மக்கள் பயன்பாடு என்று பூங்காக்களின் அளவும் நாளுக்கு நாள் குறிந்து கொண்டேபோகிறது.
சுற்றுசூழல் கருதி அந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா வந்தால் மக்களுக்கும் சென்னை சூழலுக்கும் நன்மைபயக்குவதாக இருக்கும். 66.4 ஏக்கரில் மரங்களும் தாவரங்களும் சென்னையின் மத்தியில் இருந்தால் காலநிலைக்கும் உகந்ததாக இருக்கும். மக்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடிய வகையில், பசுமைச் சூழலுடன் கூடிய பூங்காவை உருவாக்குவதுதான் சரியானதாக இருக்கும். ஆனால் ஈனும் அரசு தெளிவாக என திட்டம் என்பதை சொல்லாததானல் மக்கள் கோயம்பேடு எதுவாக மாற போகிறது? என்ற கேள்வியில் உள்ளனர்.

