தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 408 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையாக மொத்தம் ரூ.1.00 இலட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து நிதியுதவியாக அளிக்க கோரி, கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து,
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய தேவையான பயனாளியின் பங்களிப்புத்தொகை ரூ.1.00 இலட்சத்தினை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ஒதுக்கி, அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையினை ஆட்சியர் வழங்கினார்
மேலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதிகளின் காப்பாளர்களுக்கு பரிசுகள், நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சையது ஹமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

