கலை, விளையாட்டு, தொண்டு எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்து தொடர்ந்து அசத்திவருகின்றனர்.
முத்தமிழ்செல்வி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 34 வயதான முத்தமிழ்செல்வி உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான 8,850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட்டை எட்டிய பெண் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர் என்ற சிறப்பை பெற்றார். இந்தச் சாதனையை அடைந்த முதல் தமிழ்ப் பெண் இவர். கடினமான சாகச விளையாட்டாகக் கருதப்படும் மலையேற்றத்தை மேற்கொள்ள தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு, தடைகளைத் தாண்டி எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்.
வித்யா ராம்ராஜ்
கோவையைச் சேர்ந்த 25 வயதான தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தமிழ்நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். 2023இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் இவர். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம், மகளிர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார். தடை தாண்டும் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், 55:42 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த வித்யா, இந்தியாவின் ‘தங்க மங்கை’ பி.டி உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்தும் கவனிக்க வைத்தார்.
சாய் சுதர்ஷன்
தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அறிமுகத் தொடரிலேயே அசத்தியிருக்கிறார், 22 வயதான சாய் சுதர்ஷன். அண்மையில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி தொடர்ச்சியாக இரண்டு அரைச் சதங்களை விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் 1987இல் அறிமுகமாகி தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசிய நவ்ஜோத் சிங் சித்துவின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன் செய்தார். இதேபோல் 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணிக்காக 96 ரன்களைக் குவித்து பாராட்டைப் பெற்றார்.
பவானி தேவி
சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான 28 வயதான பவானி தேவி, இந்த ஆண்டு ஜூனில் சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல கோவாவில் நடைபெற்ற 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்குத் தகுதிபெற வெளிநாடுகளில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அவர், தன் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்.
பிரக்ஞானந்தா & குகேஷ்
செஸ் விளையாட்டின் தலைநகரம் என்று போற்றப்படும் அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த கிராண்ட் மாஸ்டர்களில் 18 வயதான ஆர். பிரக்ஞானந்தாவும் 17 வயதான டி. குகேஷும் சர்வதேச செஸ் அரங்கில் இந்த ஆண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இவர்கள், அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்தது கவனிக்க வைத்தது.
‘டைகர் ஆஃப் மெட்ராஸ்’ என்றழைக்கப்படும் ஆனந்தின் 36 ஆண்டுக் கால சாதனையை முறியடித்து, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்கிற இடத்தைக் கைப்பற்றினார் குகேஷ். இன்னொரு புறம், ஆனந்துக்குப் பிறகு உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய, பதக்கம் வென்ற இந்தியர் ஆகிய பெருமைகளைப் பெற்றார் பிரக்ஞானந்தா.

