தீர்த்தமலை தீர்த்தகிரிசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அரூருக்கு அருகில்உள்ள தீர்த்தமலையில் உள்ள சிவன் கோயிலாகும். தர்மபுரியிலிருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை சாலை மார்கத்தில் அரூரிலிருந்து 17 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. தர்மபுரியிலிருந்து 52 KM தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்த கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். இதுவே தரும்புரி மாவட்டத்தில் தற்போது உள்ள கோயில்களில் பழமையானது ஆகும்.
தீர்த்தமலை பெயர் காரணம்
இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வீற்றிருக்கிறார். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி செல்லும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர தாமதம் ஆனதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங் கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். தீர்த்தமலை என்ற பெயருக்கேற்ப இந்த மலையில் ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடினால் அணைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தீர்த்தமலையின் சிறப்பு
தீர்த்த மலையில் கடவுளர்கள் பெயரில் இராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. இதில் இராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நிர்ப்பதில்லை என்பதே இந்த இடத்தின் சிறப்பு. இந்த தீர்த்ததிர்காகவே தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

தீர்த்தகிரீஸ்வரர் கோயில்
தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது. ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம். அதிலும் அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருனகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலமாக இது அறியப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் மலையேற்றம் நேர்த்தியான படிக்கட்டுகளுடன், அழகாக அமைந்திருக்கும். எனினும் உயரம் உங்களை கீழேத் தள்ள காத்திருக்கும்.கவனமாக செல்லவேண்டும். அரைமணி நேர தோராய நடை பயணத்துக்குப் பின் கோயிலை வந்தடையலாம். வெய்யில் தாழ்ந்து பயணம் செல்பவர்கள், கோயில் நடை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திறந்திருக்கும் என்பதை கருத்தில்கொண்டு முடிந்தவரை விரைவாக செல்லுங்கள். வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு இடையே அமைந்துள்ளது. கோவை, பெங்களூரு முதலிய இடங்களிலிருந்து வருபவர்கள் தர்மபுரி வழியாகவும், சென்னை, புதுச்சேரி வழி வருபவர்கள் திருவண்ணாமலை வழியாகவும் வந்து சேரலாம். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திரு நாமம் ‘வடிவாம்பிகை’ என்பதாகும்.
இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் இத்தல ஆலயத்திற்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

