குடியம் குகை தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ளது. இதுவொரு தொன்மையான குகைவாழிடம் ஆகும். இது முதலில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான ராபர்ட் புரூஸ் பூட் என்பவரால் 1860களில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இந்தியத் தொல்லியல் துறையினரால் இந்தப் பகுதி 1962-64க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.

குடியம் குகைகளில் பழைய கற்கால மனிதர்களின் வீடுகளாக இருந்தவையென கருதப்படுகின்றன. இந்த குகை பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மரங்கள், அடர்ந்த புதர்கள், மூலிகைச் செடிகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உருளை கூழாங்கற்கள், ஒரே நேரத்தில் பலர் தங்கும்படியான குகைகள் என பல வரலாற்று சிறப்புகளைக் கொண்டது.
குடியம் குகையில் உள்ள பாறைகள் உருவாகி சுமார் 13 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று, இந்திய புவியியல் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்பட்ட படிவங்கள் இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன

இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை மனச்சம்மன் குகை ஆகும். சுமார் 100 அடி உயரமுடைய இந்தக் குகை நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறையினரால் கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் என ஆதிமனிதர்கள் உருவாக்கிய பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ளது.ஆதி தமிழர்களின் வாழ்ந்த வரலாற்றை பறைசாற்ற குடியம் குகைகளை தொல்லியல் துறை பாராமரிக்க வேண்டும்.

